அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டார். வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டு விமான தளத்திற்கு சென்றடைந்த அவருக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
சிறிய அளவிலான மழை பெய்தபோதிலும் மோடியின் பெயரை கரகோஷம் எழுப்பி இந்திய கொடியை அசைத்து அவரை உற்சாகப்படுத்தினர். காலை மழையை பொருட்படுத்தாமல் மோடியை வரவேற்பதற்காக குறிப்பிடதகுந்த அளவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அங்கு கூடியிருந்தனர்.
அமெரிக்க அரசின் சார்பில் மூத்த அலுவலர்கள், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் மோடியை வரவேற்றனர். இதுகுறித்து மோடி ட்விட்டர் பக்கத்தில், "வாஷிங்டனில் உற்சாகமான வரவேற்பு அளித்த இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புலம்பெயர் இந்தியர்களே நமது பலம். உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் மேம்பட்டிருப்பது பாராட்டத்தக்கது" என பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பெற்றதிலிருந்து ஏழாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ள மோடி, "அமெரிக்காவுடனான வியூக ரீதியான கூட்டணி இப்பயணத்தின் மூலம் வலுப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
வாஷிங்டனில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்திக்கவுள்ளார். ஆப்கன் விவகாரம் அதன் தாக்கங்கள், சீனாவின் ஆதிக்கம், தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அமெரிக்க - இந்திய கூட்டணியை மேலும் விரிவுப்படுத்துவது எப்படி போன்ற வி்வகாரங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.
ஜோ பைடன் நடத்தும் கரோனா உலகளாவிய உச்ச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா தெரி்வித்திருந்தார்.