தீவிரவாதக் குழுக்களின் கடத்தல் அச்சுறுத்தல்களால் 10 லட்சம் நைஜீரியக் குழந்தைகள் நடப்பாண்டு தங்களது பள்ளிப்படிப்பை இழந்துள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் அவ்வப்போது துப்பாக்கி முனையில் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. தங்களது படிப்பிற்காக பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் கடத்தப்படுவதால் அவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | 100 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை
குறிப்பாக வடக்கு நைஜீரியாவில் இயங்கிவரும் ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழுக்களின் இலக்காக பள்ளிக்குழந்தைகள் இருப்பதால் அவர்கள் கடத்தப்படுகின்றனர்.
2021ஆம் ஆண்டில் மட்டும் நைஜீரியப் பள்ளிகளில் ஆயுதக்குழுக்களால் 20 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் இதுவரை 1400 குழந்தைகள் கடத்தப்பட்டும், அவர்களில் 14 பேர் பலியாகியும் உள்ளனர். மேலும் 200 குழந்தைகளின் நிலை என்ன ஆனது எனத்தெரியாமல் அவர்களது பெற்றோர்கள் நிர்கதியாகியுள்ளனர்.
நைஜீரியாவிற்கான யுனிசெஃப் பிரதிநிதி பீட்டர் ஹாகின்ஸ் பேசும்போது, தீவிரவாதக் குழுக்களின் அச்சுறுத்தலால் குழந்தைகள் தங்களது பள்ளிக்கல்வியை இழந்து வருவதாகக் தெரிவித்தார். குழந்தைகளின் பாதுகாப்பின்மை காரணமாக பல பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ள அவர் 10 லட்சம் குழந்தைகள் இதனால் தங்களது கல்வியை இழந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.