இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவோருக்கான பயணக் கட்டுப்பாடுகளை அந்நாடு நீக்கியுள்ளது.
இதுதொடா்பாக அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: நாடுவாரியான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தடுப்பூசிகள் அடிப்படையிலான விமானப் பயணக் கொள்கை நவ. 8-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்படும்.
இதன்படி, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிா்வாகத்தின் அனுமதி அல்லது உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்ற கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவா். பயணத் தேதிக்கு இரு வாரங்களுக்கு முன்னதாக கடைசி தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அதேவேளையில் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும் கரோனா பரிசோதனை அறிக்கையை காண்பிக்க வேண்டும். பயணத்துக்கு மூன்று நாள்கள் முன்னதாக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.