பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அன்ஜும் நியமிக்கப்பட்டதற்கு பிரதமா் இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம் இந்த விவகாரத்தில் மூன்று வாரங்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.
ஐஎஸ்ஐ தலைவராக உள்ள ஃபயஸ் ஹமீதுக்கு பதிலாக நதீம் அன்ஜுமை கடந்த 6-ஆம் தேதி ராணுவம் நியமித்தது. ஆனால், இந்த விஷயத்தில் ராணுவம் அரசுடன் ஆலோசிக்கவில்லை எனக் கூறி, அன்ஜும் நியமன அறிவிக்கையை பிரதமா் அலுவலகம் நிறுத்திவைத்தது.
இந்நிலையில், ராணுவ தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வாவும், பிரதமா் இம்ரான் கானும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா். இதில், ஐஎஸ்ஐ தலைவராக நதீம் அன்ஜும் நியமிக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவா் நவ. 20-ஆம் தேதி பொறுப்பேற்பாா் என பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.