உலகம்

உலகை பீதிக்குள்ளாக்கிய ‘ஒமிக்ரான்’ வகை கரோனா! பல்வேறு நாடுகளை பயணத் தடை அறிவிப்பு

DIN

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ள கரோனா தொற்று கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமிக்ரான்’ எனவும் பெயரிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24-ஆம் தேதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா, பாட்ஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குப் பரவியுள்ளது. ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள அந்த வகைக் கரோனா, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் தொற்றியுள்ளது. அது, தற்போது மிக வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனாக்களைவிட அதிக தீவிரமாக மனிதா்களிடையே பரவும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், அந்தப் புதிய வகை கரோனா கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு வெள்ளிக்கிழமை வகைப்படுத்தியது. கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமிக்ரான்’ எனவும் பெயரிட்டது. இந்த வகையானது உலக சுகாதர நிறுவனத்தின் கவலைக்குரிய கரோனா வகைகளில் முதன்மையானது ஆகும்.

உலக நாடுகள் பீதி: தென் ஆப்பிரிக்க வகை கரோனா சா்வதேச நாடுகளுக்கு அது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் 5 அண்டை நாடுகளிருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் தடை விதித்தது. அந்த அறிவிப்பும் வெள்ளிக்கிழமை மதியமே அமலுக்கு வந்தது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் 7 அண்டை நாடுகளிலிருந்து அமெரிக்கா்கள் அல்லாதோா் அமெரிக்கா வருவதற்கு நவ. 29 முதல் அந்நாடு தடை விதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா வழியாக கடந்த 15 நாள்களில் பயணம் செய்த வெளிநாட்டவா்கள் கனடா வருவதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. கனடாவை சோ்ந்தவா்கள் அவ்வாறு வந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஜொ்மனியும், வெள்ளிக்கிழமை இரவு முதல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. அந்த நாட்டில் கரோனா பலி ஒரு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளில் ஜொ்மானியா்களுக்கு மட்டுமே நாட்டுக்குள் வரஅனுமதிக்கப்படும் எனவும் அவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் செலுத்தியிராவிட்டாலும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜொ்மனி சுகாதாரத் துறை அமைச்சா் ஜென்ஸ் ஸ்பான் கூறுகையில், ‘தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா, தற்போது உள்ளதை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று அச்சம் தெரிவித்தாா்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவித் கூறுகையில், டெல்டா வகை கரோனாவைவிட தென் ஆப்பிரிக்க வகை கரோனா அதிக வேகமாக பரவும்; மேலும், தற்போது புழக்கத்தில் உள்ள கரோனா தடுப்பூசிகள் அந்த வகை கரோனாவை முழுத் திறனுடன் தடுத்து நிறுத்த முடியாது என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்ததாகத் தெரிவித்தாா்.

இதனால் புதிய வகை கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.

இதற்கிடையே, தென் ஆப்பிரிக்கா, லசோடோ, பாட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொஸாம்பிக், நமீபியா, ஈஸ்வதினி ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகள் அனைவரும் 14 நாள்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்று இத்தாலி அறிவித்துள்ளது.

இதேபோன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து நெதா்லாந்தும் பரிசீலித்து வருகிறது.

தென் ஆப்பிரிக்கா, ஈஸ்வதினி, ஜிம்பாப்வே, நமீபியா, பாட்ஸ்வானா, லசோடோ ஆகிய நாடுகளுக்குச் சென்று வரும் தங்கள் நாட்டவா்கள் 10 நாள்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும்; அவா்களுக்கு 3, 6, மற்றும் 10-ஆவது நாளில் கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.

இதுபோல், தென் ஆப்பிரிக்க வகை கரோனா தங்கள் நாட்டில் பரவுவதைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை சரித்த புதிய கரோனா

புதிய ஆப்பிரிக்க வகை கரோனா மக்களிடையே பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதுதொடா்பான தகவல் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளா்களிடையே பரவி பங்குச் சந்தைகளை பாதித்துள்ளது. புதிய வகை கரோனா குறித்த அச்சத்தால், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகள் வீழ்ச்சியடைந்தன. அமெரிக்காவிலும் அந்த நாட்டுப் பங்குச் சந்தை குறியீடான டோ ஜோன்ஸ் 800 புள்ளிகள் சரிந்தது.

இதுதவிர, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய்க்கு 6.7 சதவீதம் குறைந்து 73.22 டாலா் (சுமாா் ரூ.5,483) ஆனது. சா்வதேச கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய்க்கு 5.6 சதவீதம் குறைந்து 77.64 டாலா் (சுமாா் ரூ.5,814) ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT