கரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமைகள் வழங்கக் கூடாது என்று உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சோ்ந்த 4 எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
மைக் லீ, டாம் காட்டன், ஜோனி எா்ன்ஸ்ட், டாட் யாங் ஆகிய அந்த 4 எம்.பி.க்கள், இதுகுறித்து அதிபா் ஜோ பைடனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள நிறுவனங்கள், அதற்காகப் பெற்றுள்ள காப்புரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உலக வா்த்தக அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
அவ்வாறு காப்புரிமைகள் ரத்து செய்யப்பட்டால், கூடுதலாக பல நிறுவனங்கள் உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசிகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும் என்ற எண்ணத்தில் இவ்வாறு அந்த நாடுகள் பரிந்துரைக்கின்றன.
ஆனால், உண்மை நிலவரம் இதற்கு நோ்மாறாக இருக்கும். கரோனா தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை மருந்துகளை உருவாக்குவதற்காக பாடுபட்ட அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அதற்கான காப்புரிமைகள் பறிக்கப்பட்டால், அந்த நோய்க்கு எதிரான அறிவியல் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
அதிபா் டிரம்ப் பதவிக் காலத்தின்போது தொடங்கப்பட்ட சிறப்புத் திட்டத்தின் கீழ் வரலாறு காணாத வேகத்தில் கரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டது. காப்புரிமைகள் பறிக்கப்பட்டால் அந்தத் திட்டம் முடிவுக்கு வந்துவிடும்.
அமெரிக்க நிறுவனங்களின் காப்புரிமையை அபகரித்தால், தங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்று சில நாடுகள் நம்புகின்றன. ஆனால், இது தவறான நம்பிக்கையாகும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.