நியூசிலாந்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிஸ்போர்ன் நகரிலிருந்து வடகிழக்கில் 181 கிலோமீட்டர் தொலைவில் 9 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
நியூசிலாந்தில் கடந்த வியாழக்கிழமை 8.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. வடக்கு தீவின் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சுனாமி அச்சுறுத்தல் காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.