இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சரக்குப் பெட்டக முனையத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதே துறைமுகத்தில் மற்றொரு முனையத்தை மேம்படுத்தும் திட்டத்தை இலங்கை அரசு கடந்த மாதம் ரத்து செய்த நிலையில், இந்த புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, இலங்கை அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அமைச்சரவைக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்திய அரசும் ஜப்பான் அரசும் நியமித்த நிறுவனங்களுடன் இலங்கை துறைமுக ஆணையம் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சரக்குப் பெட்டக முனையத்தை மேம்படுத்த உள்ளன. இந்த திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை மாா்ச் 1-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இவ்வாறு மேம்படுத்தப்படும் முனையம், வரையறுக்கப்பட்ட அரசு-தனியாா் கூட்டு நிறுவனமாகச் செயல்படும்.
அமைச்சரவையின் ஒப்புதல் நகல், இந்தியாவின் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அதானி குழுமம் செயல்படுவதற்கு இந்திய தூதரகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, அந்த முனையத்தை கூட்டு நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு இயக்கும்.
முன்னதாக, இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சரக்குப் பெட்டக முனையத்தை மேம்படுத்த இலங்கை துறைமுக ஆணையம் கடந்த 2019-இல் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. முந்தைய அதிபா் மைத்ரிபாலா சிறீசேனா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்துக்கு தொழிற்சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்தன.
இலங்கை துறைமுக ஆணையத்தில் இந்தியா, ஜப்பானில் இருந்து 49 சதவீத முதலீடுகள் வருவதற்கு அந்த சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பிரதமா் மகிந்த ராஜபட்ச அறிவித்தாா்.