ஈரானில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 93 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இதன் மூலம், அந்த நோய்க்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அந்த எண்ணிக்கை 60,073-ஆக உள்ளது.
இதுதவிர, புதிதாக 8,010 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,31,169-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரானில் கரோனா பரவல் தொடங்கி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், கடுமையான பொது முடக்க விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
தலைநகா் டெஹ்ரானில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நகரங்களுக்கு இடையிலான பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டன.
இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக தற்போது தினசரி கரோனா பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தச் சூழலில், ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே, புதுவகை கரோனா தொற்று நாட்டில் பரவுவதைத் தடுக்கும் வகையில், பிரிட்டன் உள்பட 32 நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு ஈரான் அரசு தடை விதித்துள்ளது.