இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு பிலிப்பின்ஸ் அரசு அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த வரிசையில் பிலிப்பின்ஸில் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்பணி கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிக்கு பிலிப்பின்ஸ் அரசு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்மூலம் கோவேக்சின் தடுப்பூசி பிலிப்பின்ஸ் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. முன்னதாக பிலிப்பின்ஸில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயாராக இல்லாத பொதுமக்கள் கைது செய்யப்படுவர் என அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.