கரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து இத்தாலியில் ஜூன் 28 முதல் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா முதல் அலையின் போது அதிகப்படியான பாதிப்பை பதிவு செய்த நாடு இத்தாலி. தொற்று பரவல் காரணமாக மக்கள் தங்கள் அன்றாட வாழ்விற்கே மிகுந்த சிரமப்பட்டனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் நாட்டில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் ஜூன் 28ஆம் தேதி முதல் கரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதேசமயம் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இதுவரை 42 லட்சத்து 53 ஆயிரத்து 460 பேர் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.