உலகளவில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,88,531 -ஆக உள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 கோடியே 95 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அதாவது செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் இதுவரை 17,95,44,326 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 16,42,43,462 பேர் மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 1,14,12,333 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 82,634 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், ஒரு நாளில் கரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட மிக அதிக வேகத்தில் கரோனா தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி தற்போது மெல்ல மீண்டு வருகின்றன. ஆனால் அதற்குள் 6 முதல் 8 வாரங்களில் மூன்றாம் அலை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,44,19,839 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6,17,463 -ஆக உள்ளது.
இரண்டாவது இடத்திலிருக்கும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,99,73,457 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 3,89,268 -ஆக உள்ளது.
ஒரு சில நாடுகளில் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையும் காண முடிகிறது.