உலகம்

ஜெனீவாவில் பைடன் - புதின் பேச்சு

DIN

ஜெனீவா: உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஜோ பைடனுக்கும் விளாதிமீர் புதினுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் புதன்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே 2009 முதல் 2017-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த ஜோ பைடன், விளாதிமீர் புதினைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆனால், அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் புதினை நேரடியாகச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

தூதர்களை மீண்டும் பணியமர்த்த முடிவு

பைடன், புதின் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை 4 மணி முதல் 5 மணி நேரம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. இதுபோன்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம்.

ஆனால், பைடனுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் புதின் தனியாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என்னுடன் மனித உரிமை விவகாரங்கள் குறித்து பேசினார். ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி குறித்தும் அவர் விவாதித்தார். அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக அமெரிக்கா-ரஷியா இடையே எஞ்சியுள்ள ஒப்பந்தம் வரும் 2026-ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது.

அந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருவரும் தீர்மானித்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து ரஷிய தூதரும், ரஷியாவில் இருந்து அமெரிக்க தூதரும் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அனுப்பப்பட்ட நிலையில், அவர்களை மீண்டும் பணியமர்த்துவதற்கும், இணையவழி பாதுகாப்பு ஆலோசனைகளை தொடங்கவும் இருவரும் ஒப்புக் கொண்டோம். இந்தப் பேச்சுவார்த்தை எந்த விரோதமும் இல்லாமல் ஆக்கபூர்வமாக அமைந்தது. எனினும் அமெரிக்காவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் பரஸ்பர நலன் குறித்த நம்பிக்கை தென்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பைடன் கூறுகையில், "எனது செயல்திட்டம் ரஷியாவுக்கு எதிரானது அல்ல எனவும், அமெரிக்க மக்களின் நலன் சார்ந்தது என்றும் புதினிடம் தெளிவுபடுத்தினேன். இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.

புதினுடன் ஆயுதங்கள் கட்டுப்பாடு, இணையவழி தாக்குதல் குறித்தும் ஆலோசித்தேன். அவற்றுக்கான உள்கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தேன்' எனக் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பதற்றமான தருணங்களிலும் இருதரப்புக்கும் பொதுவான இலக்குகளை எட்டுவதில் இருநாடுகளும் முன்னோக்கிச் செல்ல முடிந்ததை இந்தச் சந்திப்பு எடுத்துக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT