உலகளவில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,27,648 -ஆக உள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 கோடியே 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அதாவது செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் இதுவரை 17,70,27,654 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 16,12,08,410 பேர் மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 1,19,91,596 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 84,628 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், ஒரு நாளில் கரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட மிக அதிக வேகத்தில் கரோனா தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி தற்போது மெல்ல மீண்டு வருகிறது.
தொற்று பாதிப்பும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,35,239 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6,15,232 -ஆக உள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,95,70,035 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 3,77,061 -ஆக உள்ளது.
இதேபோல் பிரேசில், பிரான்ஸ், துருக்கி, இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.