கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கரோனா உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மற்ற நாடுகள் திணறி வந்த நிலையில், பெருந்தொற்று கட்டுப்படுத்திவிட்டதாக சீனா அறிவித்தது.
கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. புதிதாக மேலும் இரண்டு பகுதிகளுக்கு பெருந்தொற்று பரவியிருக்கிறது.
பெய்ஜிங் உள்பட நான்கு மாகாணங்களில் கரோனா ஏற்கனவே பரவிய நிலையில், புஜியான் மாகாணம் மற்றும் சோங்கிங் நகராட்சியில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு ஜியாங்சு மாகாணத்திலிருந்து பரவிய கரோனா நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்டோரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. ஜூலை 20ஆம் தேதி, நாஞ்சிங் விமான நிலையத்தில் ஒன்பது பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, நாஞ்சிங் நகரில் சுற்றுலா தலங்கள் கலாசார மையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் வாழும் 9.2 மில்லியன் பேருக்கு இரண்டு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.