ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த 4 வயதேயான சிறுமி கடலில் உள்ள நெகிழி குப்பைகளைக் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.1 கோடி டன் நெகிலிக் குப்பைகள் கடலில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. நெகிலிக் குப்பைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் நெகிழிக் கழிவுகளை உட்கொள்வதன் மூலமோ அல்லது அவற்றில் சிக்கிக்கொள்வதன் மூலமோ இறக்கின்றன.
இதையும் படிக்க | இரவில் மின்னும் ஒலிம்பிக் நகரம்: நாசா வெளியிட்ட புகைப்படம்
இந்நிலையில் கடலில் கலக்கும் நெகிழிக் குப்பைகளால் பலியாகும் கடல்வாழ் உயிரினங்களைக் காக்கும் விதமாக குப்பைகளை அகற்றும் 4 வயது சிறுமியின் செயல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிராவைச் சேர்ந்த 4 வயது சிறுமி நினா கோமெஸ். தனது தந்தையுடன் ரியோவில் உள்ள குவானாபரா விரிகுடா கடலுக்கு சென்றபோது அங்கு இருந்த நெகிழிக் குப்பைகளைக் கண்ட நினா இதுகுறித்து தனது தந்தையிடம் கேட்ட அவர் நெகிழிக் குப்பைகளால் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதை தெரிவித்தார். இதனையறிந்த நினா அவற்றை அப்புறப்படுத்த எண்ணி செயலில் இறங்கியுள்ளார்.
தனது தந்தையின் உதவியுடன் கடலில் உள்ள நெகிழிக்குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தி வருகிறார் அவரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய நினா, “கடலில் உள்ள குப்பைகளால் ஆமைகளும், மீன்களும் இறக்கின்றன” என தனது மழலை மொழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு கடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தை இயக்கியுள்ள நினாவின் தந்தை கடலில் உள்ள நெகிழிக் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கான அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.