சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்ல செளதி அரேபியா அந்நாட்டு மக்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இருப்பினும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உலக நாடுகள் தளர்வுகளை அறிவித்துவருகிறது.
இந்நிலையில், பெருந்தொற்றை கட்டுப்படுத்த சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்வதை தடுக்க செளதி அரேபியா அந்நாட்டு மக்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "விதிகளை மீறி செல்பவர்கள் சட்டப்பூர்வமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்றுவிட்டு செளதி அரேபியா திரும்பும்போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி அவர்கள் பயணம் மேற்கொள்வதற்கு மூன்றாண்டு தடை விதிக்கப்படும்.
கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வராத அல்லது புதிய வகை வைரஸ் பரவி வரும் நாடுகளுக்கு நேரடியாக அல்லது வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்தோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோபியா, இந்தியா, இந்தோனேஷியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு செல்ல செளதி அரேபியா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.