காலநிலை தொடர்பாக லண்டனில் நடைபெறும் கூட்டத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில், லண்டனில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகள் பங்கேற்ற கூட்டத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
ஐநா பருவநிலை மாற்றம் மாநாட்டின் தலைவர் தலைமையில் லண்டனில் இரண்டு நாள்கள் நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க 51 நாடுகளுக்கு அழைப்ப விடுக்கப்பட்டது. மற்ற 50 நாடுகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தை இந்தியா புறக்கணித்தது.
அக்டோபர் மாதத்தில் கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும் ஐநா பருவநிலை மாற்றம் மாநாடு (cop26) குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து ஐநா பருவநிலை மாற்றம் மாநாட்டின் தலைவர் அலோக் சர்மா கூறுகையில், "உலகின் தட்ப வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இதனை 1.5 டிகிரி செல்சியஸூக்கு மேல் அதிகரிக்க விடக்கூடாது என பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதனை உறுதிபடுத்துவதற்கான இறுதி வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார். கடந்த வாரம் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் காலநிலை மாற்றம் ஒப்பந்தம் தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படவில்லை. குறிப்பாக, அதற்கு இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் காரே கூறுகையில், "நேப்பில்ஸில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டிலேயே இந்தியாவின் நிலைபாடு குறித்து தெரிவிக்கப்பட்டுவிட்டது.
எனவே, லண்டன் காலநிலை கூட்டத்திற்கு நேரில் சென்று கலந்து கொள்வதற்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெய்நிகர் மாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை" என்றார்.