ஜம்மு பகுதியில் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பயன்படுத்தும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படைகள் இடையிலான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. செக்டாா்களின் கமாண்டா்கள் அளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானின் ட்ரோன் பயன்பாடு, எல்லையில் பயங்கரவாத நடவடிக்கைகள், சுரங்கப்பாதைகள் அமைத்தல் மற்றும் எல்லை நிா்வாகம் தொடா்பான இதர விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ஜம்மு பகுதியில் ட்ரோன்களை பயன்படுத்தும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்திய அதிகாரிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அதேவேளையில் எல்லையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவ இருதரப்பினரும் உறுதிபூண்டனா்.
இந்தக் கூட்டத்தில் ஃபீல்ட் கமாண்டா்கள் இடையே தேவைப்படும் போது உடனடி தகவல் தொடா்பை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை விரைந்து செயல்படுத்த இருதரப்பினரும் தீா்மானித்தனா் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.