அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் யூடியூப் கணக்கிற்கு நிரந்தரமாக தடை விதித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் முன்பு குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விடுபட இருந்த டிரம்ப் வெளியிட்ட சுட்டுரைப் பதிவே கலவரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனையடுத்து அவரது சுட்டுரைப் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுட்டுரை, முகநூல், இன்ட்ஸ்டாகிராம், யூடியூப் நிறுவனங்கள் டிரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தன.
வன்முறையை தூண்டும் வகையிலும், விதிகளுக்கு புறம்பாக இருந்ததையும் சுட்டிக்காட்டி அவரது காணொலியை யூடியூப் நிறுவனம் நீக்கியது.
தொடர்ந்து அவரது யூடியூப் கணக்கிற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்கத் தேர்தல் குறித்த தவறான தகவல்களை வெளியிடுவதன் மூலம் யூடியூப் விதிகளை மீறியதன் அடிப்படையில் அவரது யூடியூப் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டிரம்பின் சுட்டுரைக் கணக்கும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.