லண்டன்: தொழிலதிபர் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் பிரிட்டன் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது.
வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2019}ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதனிடையே, நீரவ் மோடி கடந்த 2019}ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. அவரை நாடு கடத்தும் வழக்கு அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் ஜாமீன் கேட்டு நீரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் கடந்த மாதம் 8}ஆம் தேதி நடைபெற்றன. இறுதி வாதங்களை பதிவுசெய்துகொண்ட நீதிபதி சாமுவல் கூஸி, "இந்த வழக்கில் பிப்ரவரி 25}ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும்' என்று தெரிவித்தார்.
அதன்படி, நீதிபதி சாமுவல் கூஸி வியாழக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளார். இதையொட்டி, நீரவ் மோடி காணொலி முறையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு, பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேலின் ஒப்புதலைப் பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு, நீரவ் மோடியை நாடு நடத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கப்படும்.