சீனாவில் டெல்டா வகை கரோனா தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. 15 மாகாணங்களில் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 மில்லியனை தாண்டியுள்ளது.
திங்கள்கிழமை வூஹான் மாகாணத்தில் பணியாற்றும் 7 புலம்பெயர் தொழிலாளர்களிடையே கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் நகரின் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதேபோல் நாஞ்சிங்கில் உள்ள விமான நிலையத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களிடையே தொற்றுநோய் பரவியதை உறுதிப்படுத்தியுள்ள சீனா உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கரோனா தொற்று இதுவரை 12க்கும் மேற்பட்ட நகரங்களில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தற்காலிகமாக கரோனா பூஸ்டர் டோசுகளை போடுவதை நிறுத்துமாறு வளர்ச்சி அடைந்த நாடுகளிடம் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்து மற்றும் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து பேரிடர் அறிவிக்கப்பட்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இதையும் படிக்க | 400 மீ. தடை ஓட்டம்: நார்வே வீரர் உலக சாதனை
கரோனா வைரஸ் கண்டறியப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் கூட இன்றும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகள் தவித்துவருகின்றன.