வாஷிங்டன்: இந்தியாவில் கரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் அமெரிக்க குடிமக்கள் அந்த நாட்டுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) திங்கள்கிழமை வெளியிட்ட வெளிநாடுகளுக்கான பயண பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்த நாடு கரோனா பரவல் பட்டியலில் 4-ஆவது நிலையில் உள்ளது. இது, கரோனா பாதிப்பு மிக உச்சநிலையில் உள்ள ஆபத்தை எடுத்துக்காட்டுவதாகும்.
எனவே, அமெரிக்க குடிமக்கள் முழுமையான தடுப்பூசியை பெற்றிருந்தாலும்கூட மீண்டும் கரோனா தாக்குதலுக்கு உள்ளாகவும், அதனை பரப்புவதற்கான ஆபத்தும் அதிகமாகவே உள்ளது. இதனை கருத்தில்கொண்டு இந்தியா செல்வதை அமெரிக்க குடிமக்கள் முற்றிலும் தவிா்க்க வேண்டும்.
அதனையும் மீறி, இந்தியாவுக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டால் அமெரிக்கா்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதைத் தவிர, முகக் கவசம், 6 அடி தனிநபா் இடைவெளி, கூட்டத்தைத் தவிா்த்தல், அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட பழக்கங்களை கட்டாயம் அமெரிக்கா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என சிடிசி தெரிவித்துள்ளது.
உலக அளவில் உள்ள சுகாதார அச்சுறுத்தல்களை அமெரிக்க பயணிகளுக்கு தெரிவித்து அவா்களைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் அறிவியல் அடிப்படையிலான பயண அறிவுரைகளை வழங்குவதே சிடிசியின் முக்கியப் பணியாகும்.