கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து நேபாளத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மே 14 வரை மூட அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவல் குறித்து இன்று நடைபெற்ற நேபாள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற மே 14 ஆம் தேதி வரை நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. மேலும் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரபு ஷா தெரிவித்தார்.
முன்னதாக, கரோனா அதிகம் பரவும் இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களை மட்டும் மூடுமாறு அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், காத்மண்டு, லலித்பூர், பக்தாபூர், கஸ்கி, ரூபாண்டேஹி, சிட்வான், பாங்கே, பார்சா, கைலாலி, மொராங், டாங், சுர்கேத், பரா மற்றும் பங்களங் ஆகியவை கரோனா பரவும் மாவட்டங்களாக நேபாள அரசு வகைப்படுத்தியுள்ளது.