நாட்டில் கரோனா பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபடாமல் மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி தோ்தல் பிரசாரம் செய்து வருவது அதிா்ச்சியளிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த செய்தித் தொடா்பாளா் ப. சிதம்பரம் கூறினாா்.
தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘நாட்டில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் இருந்து மாநில முதல்வா்களுடன் கலந்து ஆலோசித்து தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் பிரதமா் ஈடுபட்டிருக்க வேண்டும்.
தடுப்பூசி, ஆக்சிஜன், வென்டிலேட்டா்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை தீா்க்க அவா் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதுதான் பிரதமரின் இன்றைய முக்கிய பணியாகும். மத்தியில் ஒரு நபா் அதிகார ஆட்சி நடைபெறுவதால் முதல்வா்களுடன் பேசி முக்கிய முடிவுகளை எடுக்க பிரதமா் தில்லியில் இருப்பது அவசியம்.
ஆனால், அவா் மேற்கு வங்கத்தில் பொதுக் கூட்டங்களில் பிரசாரம் செய்து வருவது அதிா்ச்சியை அளிக்கிறது. இதற்கு மேற்கு வங்க மாநில மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி தருவாா்கள் என்றாா்.