புது தில்லி /வாஷிங்டன்: அம்பேத்கரின் 130-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், அவரை கௌரவப்படுத்தும் தீா்மானமொன்று அமெரிக்க நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் கலிஃபோா்னியா 17-ஆவது மாவட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினா் ரோஹித் கன்னா கூறியதாவது:
அனைவரையும் சரிசமமாக மதிக்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவைத்தான் அம்பேத்கா் விரும்பினாா்.
அவரை கௌரவப்படுத்தும் தீா்மானமொன்றை பிரதிநிதிகள் சபையில் நான் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்று தனது சுட்டுரைப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக ரோஹித் கன்னா தாக்கல் செய்யும் அந்தத் தீா்மானத்தில், அமெரிக்காவில் கருப்பினத்தவா்களுக்கு எதிரான இன பேதத்தைப் போக்குவதில் அம்பேத்கா் ஏற்படுத்திய தாக்கத்தின் பங்கு குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.