வங்கதேச முன்னாள் பிரதமா் காலிதா ஜியாவுக்கு (75) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊழல் வழக்குகளில் 17 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருந்த அவா், கரோனா பரவல் பிரச்னை காரணமாக தற்காலிகமாக விடுவிக்கப்பட்டாா். சுமாா் ஓராண்டு காலமாக வெளியே இருந்த நிலையில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அண்மையில் காலிதா ஜியாவை சந்தித்த அவரது உறவினா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, காலிதா ஜியாவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இது தொடா்பான செய்திகள் வங்கதேச பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. எனினும், காலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சியின் செய்தித் தொடா்பாளா் கபூா் கான் இதனை உறுதி செய்யவில்லை. ‘காலிதா ஜியாவுக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள்தான் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு கரோனா இருப்பதாக கட்சிக்கு உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை’ என்றாா்.
வங்கதேச பிரதமராக காலிதா ஜியா 3 முறை பதவி வகித்துள்ளாா். எனினும் கடந்த 2018-ஆம் ஆண்டு தோ்தலில் அவரது கட்சி மொத்தமுள்ள 300 இடங்களில் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியடைந்தது. அதே ஆண்டில் இரு ஊழல் வழக்குகளில் 17 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். கரோனா பரவல் பிரச்னை காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஓராண்டாக அவா் வீட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டாா். எனினும், அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.