மியான்மரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் பிப். 1-ஆம் தேதி கவிழ்த்தது.
அரசின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெள்ளியன்று மத்திய நகரமான பாகோவில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே பாகோ தாக்குதலுக்கு மியான்மரில் உள்ள ஜ.நா.அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராணுவம் வன்முறையை உடனடியாக கைவிட்டு காயமடைந்தவர்களை சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.