கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 41 சதவிகிதம் பெண்கள் புதிதாக மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜெர்னல் ஜாமா நெட்வொர்க் சார்பில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மது அருந்துபவர்களின் விகிதம் சராசரியாக 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதில் அதிக அளவாக 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களாக உள்ளனர்.
மொத்தமாக மது அருந்துபவர்களில் 30 முதல் 59 வயதிற்குட்பட்டோர் 19 சதவிகிதமாகவும், பெண்கள் 17 சதவிகிதமாகவும் உள்ளனர்.
மதுபானம் வாங்குபவர்களின் எண்ணிக்கையை நேரடியாக குறிப்பெடுத்து கள ஆய்வு செய்யப்பட்ட நிலையில், கரோனா ஊரடங்கு காலத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறித்து நடைபெறும் முதல் ஆய்வு என்றும் ஆய்வுக்குழு தலைவரான மைக்கேல் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
மது அருந்துவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால், ஊரடங்கில் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற கோணத்திலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் இணையக் குழுவான RAND அமெரிக்கன் லைஃப் பேனலில் உறுப்பினர்களாக உள்ள 1,540 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 2019-ஆம் ஆண்டு குளிர்காலம் தொடங்கி 2020-ஆம் ஆண்டு கோடை வரை மது அருந்தும் விகிதம் கணக்கிடப்பட்டது. இதில் கரோனா பெருந்தொற்று காலகட்டத்தின் ஆரம்பம் வரை ஆய்வு நடத்தப்பட்டது.
முதன்மை பராமரிப்பு வழங்குநர்கள், நடத்தை சுகாதார வழங்குநர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தொற்றுநோய்களின் போது அதிகரித்த ஆல்கஹால் மற்றும் அதிக குடிப்பழக்கத்தின் அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
தொற்றுநோய் தொடர்ந்தால் ஆல்கஹால் பயன்பாடு அதிகரிப்பது தொடர்கிறதா என்பதையும், பின்னர் உளவியல் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படுகிறதா என்பதையும் எதிர்கால ஆராய்ச்சி ஆராய வேண்டும் என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.