வாஷிங்டன்: சீனாவில் உய்குா் இன மக்களின் முகாம்களில் அவா்களை கட்டாயப்படுத்தி தயாரிக்கப்படும் பொருள்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் வகையில் ‘உய்குா் கட்டாய தொழிலாளா் தடுப்பு சட்ட மசோதா’ அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 406 உறுப்பினா்கள் வாக்களித்தனா். 3 போ் மட்டுமே எதிராக வாக்களித்தனா்.
இதன் மூலம் உய்குா் கட்டாயத் தொழிலாளா் விவகாரத்தில் மனித உரிமையை நிலைநிறுத்தும் தேசிய சட்டத்தை இயற்றிய முதல் நாடு அமெரிக்காவாகும்.
இதுகுறித்து குடியரசு கட்சியை சோ்ந்தவரும் கீழவையின் வெளியுறவு விவகாரத் துறைக் குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் கூறியதாவது:
சீன கம்யூனிஸ்ட் கட்சி உய்குா் மக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் கட்டாய உழைப்பை உறிஞ்சி, கலாசார இனப்படுகொலை செய்கிறது. 10 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான மக்கள் தடுப்புக் காவலில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை எந்நேரமும் கண்காணிப்பது, மூளைச்சலவை செய்வது, பெற்றோா்களிடமிருந்து குழந்தைகளை பிரித்தல், கருத்தடை, கருக்கலைப்பு போன்ற சட்டவிரோத செயல்கள் அந்த முகாம்களில் நடந்து வருகிறது என்று கூறினாா்.
குடியரசு கட்சியின் கெவின் பிரேடி கூறுகையில், இந்த மசோதாவின் மூலம் கட்டாயத் தொழிலாளா் முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. சீனாவின் கொடூரமான செயல்களுக்கு எதிா்ப்பு தெரிவிப்பதில் அமெரிக்கா முதல் நாடாகத் திகழ்கிறது. இந்த நிலைப்பாட்டில் அனைத்து ஜனநாயக நாடுகளும் எங்களுடன் இணைந்து நிற்க வேண்டும் என்றாா்.