கரோனா தொற்று நெருக்கடியைப் போல் காலநிலை மாற்றத்தைக் கையாண்டுவிடுவோமோ என அஞ்சுவதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. தொற்று பரவலால் உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து வியாழக்கிழமை பேசிய ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ், உலக நாடுகளிடையே நிலவி வந்த ஒற்றுமையின்மையே கரோனா நெருக்கடிக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
கரோனாவிற்கு பிறகான உலகளாவிய ஆளுமை தொடர்பான மெய்நிகர் கவுன்சில் கூட்டத்தில் பேசிய குடரெஸ், கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா இடையே நிலவிய சச்சரவைக் கண்டித்தார்.
முக்கியமான பிரச்னையை விட அரசியல் போட்டியில் உலக நாடுகள் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்ட அவர் உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின்மை மற்றும் குறுகிய அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தியதே கரோனா நெருக்கடிக்கு காரணம் எனத் தெரிவித்தார்.
இதேபோல் காலநிலை மாற்றத்தையும் நாம் எதிர்கொண்டு விடுவோமோ எனும் அச்சம் தனக்கு நிலவுவதாக தெரிவித்த குடரெஸ் உலக நாடுகளிடையே ஒருமித்த செயல்பாடு அவசியம் என வலியுறுத்தினார்.