காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்க உலக தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் ஆர்க்டிக் பிரதேசத்தின் மிதக்கும் பனி மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
உலகில் பல்வேறு பகுதிகளிலும் காலநிலை மாற்றத்தின் தீவிரம் உணரப்பட்டு வருகிறது. உலகின் வெப்பநிலை உயர்ந்து வருவதால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தெற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான மியா ரோஸ் கிரேக். இணையத்தில் “பறவைப்பெண்” என்று அழைக்கப்படும் கிரேக் பறவை பார்க்கும் அனுபவங்களை விவரிக்கும் வலைப்பதிவை நடத்தி வருகிறார். இவர் ஆர்க்டிக் பெருங்கடலில் மிதக்கும் பனிக்கட்டி ஒன்றின் மீது அமர்ந்து காலநிலை மாற்றத்தைத் தடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் காலநிலைக்கான இளைஞர்கள் வேலைநிறுத்தம் எனப் பொறிக்கப்பட்ட பதாகையை ஏந்தி இருந்தார். “இந்த அற்புதமான நிலப்பரப்பு எவ்வளவு தற்காலிகமானது என்பதையும், அதைக் காப்பாற்றுவதற்காக உலகத் தலைவர்கள் இப்போது உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதையும் குறித்து உணருங்கள் என்று அவர் தெரிவித்தார்.