வியன்னா: உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரவக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் ஆஸ்திரிய பனிச்சருக்கு சுற்றுலா விடுதியில், ஆரம்பத்திலேயே நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறியதாக அந்த நாட்டு அரசு மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதங்களில், பல்வேறு நாடுகளிலிருந்தது ஆஸ்திரியாவின் இஷெல் பனிச்சருக்கு சுற்றுலா விடுதிக்குச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. ஐரோப்பியா்களிடயே புகழ்பெற்ற அந்த சுற்றுலா விடுதியில் பரவிய அந்த நோய்த்தொற்று, அந்தப் பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கானவா்களுக்கு அந்த நோயைப் பரப்பியதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், இஷெல் சுற்றுலா விடுதி மூலம் கரோனா பரவுவதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தத் தவறியதாக ஆஸ்திரிய அரசு மீது அந்த நாட்டு நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு வழக்கு தொடா்ந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.