அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் இந்தியாவுடனான பயணத் தொடர்பிற்கு தற்காலிகத் தடை விதித்து செளதி அரேபிய அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை வெளியிட்டு செயல்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் இந்தியாவுடன் பயணத் தொடர்பை நிறுத்தி வைக்க செளதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவுடனான தடை போலவே பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளுடனான பயணத் தொடர்பிற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அரசுமுறைப் பயணமாக குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி 14 நாட்களுக்கு முன்பாக வெளிநாடு பயணம் செய்தவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செளதி அரேபியாவில் இதுவரை 3 லட்சத்து 30 ஆயிரத்து 798 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.