கடந்த 25 ஆண்டுகளில் உலக பணக்கார நாடுகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் உமிழ்வு 60% அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்பாம் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காலநிலை மாற்றம் தீர்க்க முடியாத சிக்கலாக உருமாறி வருகிறது. நாளுக்குநாள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் அதிகப்படியான கார்பன் வாயுவின் அளவு பூதாகரமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கார்ப்ன உமிழ்வு குறித்து ஆக்ஸ்பாம் மேற்கொண்ட ஆய்வில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உ.லகில் கடந்த 1990 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வளிமண்டலத்தில் கார்பன் வாயுவின் அளவு 60% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. உலக மொத்த மக்கள் தொகையில் பணக்காரர்களாக உள்ள 1 சதவிகிதத்தினரால் ஏழ்மையில் உள்ளவர்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக கார்பன் உமிழ்வு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் உலகின் பணக்கார நாடுகளாக உள்ளவை ஏழ்மையான நாடுகளைக் காட்டிலும் அதிகப்படியான கார்பனை வளிமண்டலத்தில் வெளியிட்டுள்ளன.
ஆக்ஸ்பாம் மற்றும் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வில் பணக்கார நாடுகளால் அதிகரித்த இத்தகைய கார்பன் உமிழ்வு உலகத்தை காலநிலை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளது என எச்சரித்துள்ளது. மேலும் கோடிக்கணக்கான ஏழை நாடுகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் நாம் தவறிவிட்டோம் என்று ஆய்வுக் குழுவின் தலைவரான டிம் கோர் குறிப்பிட்டுள்ளார்.
"உலகளாவிய கார்பன் வெளியீட்டுத் திட்டம் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள பணக்காரர்களின் நுகர்வை விரிவாக்கம் செய்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.