பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 640 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 640 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,05,671-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 562 பேர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,92,303 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதிதாக ஒருவர் மட்டுமே கரோனாவால் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,416-ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,33,626 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 98,368 பேரும், கைபர் பதுன்க்வாவில் 37,317 பேரும், இஸ்லாமபாத்தில் 16,126 பேரும், பலூசிஸ்தானில் 14,269 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 34,544 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 31,60,924 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.