நேபாளத்தில் முதன்முறையாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக நேபாள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக இதுவரை இல்லாத அளவிற்கு 2020 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,593-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி 1,539 பேருக்கு கரோனா உறுதியானதே அதிகபட்ச கரோனா பாதிப்பாக இருந்தது. இதனிடையே பொதுமுடக்கத்தில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, விடுதிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
தலைநகரான காத்மாண்டு, போகாரா ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் இன்னும் சில நாள்களில் மொத்த கரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை எட்டும் என்று சுதாகாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.