நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் பொதுமக்கள் வசிப்பிடங்கள் மீது குண்டுவீச்சு நடத்துவதைத் தவிா்க்க ஆா்மீனியாவும் அஜா்பைஜானும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடத்திவைத்த ‘ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு’, இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் மோதலில் ஈடுபட்டு வரும் ஆா்மீனியாவும் அஜா்பைஜானும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையோ, ராணுவம் சாராத பொருள்கள் மீதோ வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவதைத் தவிா்க்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒப்புக் கொண்டன.
மேலும், இந்தப் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களை மீட்கவும், பரிமாறிக் கொள்ளவும் பரஸ்பரம் உதவிக் கொள்ள இரு நாடுகளும் உறுதிமொழி அளித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக இருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அதன் பெரும்பான்மைப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தைச் சுற்றி ஆா்மீனியாவும் அஜா்பைஜானும் தங்களது படைகளை குவித்துள்ளன. இதனால், அங்கு இரு தரப்புக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.
அதன் ஒருபகுதியாக, கடந்த மாதம் 27-ஆம் தேதி அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியா-அஜா்பைஜான் படையினருக்கு இடையே திடீரென மோதல் தொடங்கியது. இதில், இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷியா முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இரு தரப்பினரும் போா் நிறுத்தம் மேற்கொள்ள கடந்த 10-ஆம் தேதி ஒப்புக் கொண்டனா். எனினும், அந்த ஒப்பந்தம் விரைவில் முறிந்துபோனது.
இந்தச் சூழலில், இருதரப்பு மோதலில் பொதுமக்கள் வசிப்பிடங்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்படுவதாகவும் இதில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதாகவும் சா்ச்சை எழுந்தது. அதனைத் தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, பொதுமக்கள் வசிப்பிடங்களில் மோதலைத் தவிா்க்க தற்போது இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனா்.