இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக மாலத்தீவில் அமெரிக்கத் தூதரகம் அமைக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பேயோ வியாழக்கிழமை அறிவித்தார்.
தனது 5 நாள் ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பேயோ மாலத்தீவு சென்றார். முன்னதாக அவர் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம மேற்கொண்டிருந்தார்.
மாலத்தீவு பயணத்தின் போது அமெரிக்க மாலத்தீவு இடையேயான அரசு உறவின் தொடர்ச்சியாக மாலத்தீவில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் மாலத்தீவுகளிடையே கடந்த செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மூலமே அமெரிக்கா மாலத்தீவுடனான உறவைப் பேணி வருகிறது. கரோனா தொற்று பாதிப்புக்கு எதிரான மாலத்தீவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா 20 லட்சம் டாலர் மதிப்பிலான உதவியை வழங்கியுள்ளது.