கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற அரசு முடிவெடுத்துள்ளது.
கலிபோர்னியாவில் சமீபத்தில் அதிகரித்துள்ள வெப்ப அலைகளால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள வெப்பஅலைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை லாஸ்ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 29 சதுர கிலோ மீட்டர் பகுதிகளில் தீ பரவியது. இதனால் சில்வராடோ கனியன் மற்றும் இர்வின் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் தீயால் சூழ்ந்தன.
பலத்த காற்று வீசி வருவதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். மேலும் தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு கலிபோர்னியாவில் ஆறு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற கலிபோர்னியா அரசு முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 8,600 காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது.இதனால் 31 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.