உலகம்

உலகம் மேலும் அதிக ஏற்றத்தாழ்வு கொண்டதாக மாறும்: எய்ட்ஸ் அமைப்புத் தலைவர்

DIN

இனிவரும் காலம் உலகம் மேலும் அதிக ஏற்றத்தாழ்வு கொண்டதாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் எய்ட்ஸ் கூட்டுத் திட்டத்துக்கான தலைவர் (யுஎன்எய்ட்ஸ்) வின்னி பியன்னீமா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் நாள். இந்த நாளையொட்டி செய்தியொன்றை வெளியிட்டிருக்கிறார், ஐக்கிய நாடுகள் அவையின் எய்ட்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் வின்னி பியன்னீமா.

"உலக எய்ட்ஸ் நாள் 2020 என்பது வேறொன்றுமே இல்லை. 
கடந்த 20 ஆண்டுகளாக உலகம் சுகாதார, மேம்பாட்டுப் பணிகளில் இதுவரை மேற்கொண்டு வந்த அனைத்து முன்னேற்றப் பணிகளையும் கரோனா பேரிடர் அச்சுறுத்தி வருகிறது, எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இதுவரை நாம் மேற்கொண்ட முன்னேற்றப் பணிகளையும் சேர்த்து.

ஏனைய பேரிடர்களைப் போலவே, நாட்டில் ஏற்கெனவே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கரோனா பேரிடரும் மேலும் அதிகரிக்கச் செய்யும்.

பாலின ஏற்றத்தாழ்வு, இன ஏற்றத்தாழ்வு, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவை ஏற்கெனவே உலகில் நிலவுகின்றன. இனி இந்த உலகம் மேலும் அதிக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டதாக மாறும்.

கடந்த ஆண்டில் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான நமது இயக்கத்தின் செயல்பாடுகள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதையும் எய்ட்ஸ் பாதித்து வாழும் மக்களையும் எய்ட்ஸ் பாதிக்க வாய்ப்புள்ள மக்களையும் பாதுகாக்கவும் கரோனாவிலிருந்து காக்கும் பணியிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதற்காகவும் பெருமைகொள்கிறேன்.

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எய்ட்ஸ் நோயாளிகளின் வீட்டுக்கே சென்று மருந்துகளை வழங்குவது மற்றும் நிதியுதவி செய்வது, எய்ட்ஸ் பரவும் அபாயம் உள்ளவர்களுக்கு உணவு, தங்குமிடங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றில், எய்ட்ஸ் நோய்க்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்களும், அதனால் பாதிக்கப்பட்டவர்களும், எய்ட்ஸ் நோய்க்கு எதிராக மீண்டும் ஒரு முறை தங்களது கடமையை நிரூபித்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.

சமுதாயத்துக்குள் இருக்கும் ஒற்றுமையின் உதாரணம் இது. நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நமது கடமையைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்றவற்றால் எய்ட்ஸ் நோய்க்கு எதிராகக் கிடைத்த வெற்றியைத் தற்போது நமக்குள் பகிர்ந்து கொள்கிறோம்.

தற்போது, கரோனா பேரிடருக்கு மத்தியில் எய்ட்ஸ் நோயை வெல்வதற்கான நமது போராட்டம் இன்னும் அதிகமாக வலுவூட்டப்பட வேண்டும்.

எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் செய்த அதே தவறைத் தற்போது உலக நாடுகள், கரோனா பேரிடரின்போது செய்யவில்லை. ஆம், எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்காகக் காத்திருந்தே பல நோயாளிகள் பலியாகிவிட்டனர்.

ஏன் இன்றுகூட, சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் எச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதித்து சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் கிடைக்காமல் 2019-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 17 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில்தான், கரோனா தடுப்பு மருந்து அனைவருக்கும் சமமாக பகிரப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அவையின் எய்ட்ஸ் அமைப்பு குரல் கொடுக்கிறது.

கரோனா தடுப்பு மருந்து மக்களுக்கானதாக, சமநிலையோடு பகிரப்பட வேண்டும் என்பதே எங்கள் குரல்.

எய்ட்ஸ் பேரிடரை முடிவுக்குக் கொண்டு வரும் நமது இலக்கானது, கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, முதலில் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தை மீண்டும் முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும். பிறகு, சமூக அநீதியை ஒழித்து, எய்ட்ஸ் பரவும் அபாயமுள்ளவர்களை மீட்க வேண்டும். உலக மக்களின் ஆரோக்கியத்துக்காக நாம் நிச்சயம் போராட வேண்டும். மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் முக்கிய எதிரிகளாக விளங்கும் அதிகக் கட்டணம் போன்றவற்றைக் குறைக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மனித உரிமைகள் முழுவதும் மதிக்கப்பட வேண்டும், அதோடு, ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர், போதைக்கு அடிமையானவர்களைக்  குற்றவாளிகளாக்குவதையும் ஓரங்கட்டப்படுவதையும் முற்றிலும் தடுக்க வேண்டும்.

தற்போது நாம் 2020-ஆம் ஆண்டின் நிறைவில் இருக்கிறோம், தற்போது உலகமே மிகவும் அபாயகரமான இடத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறது, வரும் மாதங்களும் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை.

'உலகளாவிய ஒற்றுமை மற்றும் கடமையைப் பகிர்ந்துகொள்வது' மட்டுமே கரோனாவை வெற்றிகொள்ளவும், எய்ட்ஸ் பேரிடருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், உடல் நலம் என்பது அனைவருக்குமானது என்பதை உறுதி செய்யவும் உதவும்" என்று கூறியுள்ளார் வின்னி பியன்னீமா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT