உலகம்

சீன எல்லையை மூடியது மங்கோலியா

28th Jan 2020 04:33 AM

ADVERTISEMENT

உலேன்படாா்: சீனாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மங்கோலியா மூடிவிட்டது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மங்கோலியாவில் பள்ளிகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தங்கள் நாட்டில் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து நாடுகளுமே தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சீனாவின் அண்டை நாடான மங்கோலியா தங்கள் நாட்டில் கரோனா வைரஸ் ஊடுருவிடக் கூடாது என்பதற்காக சீனாவுடான எல்லையை மூடிவிட்டது. இதனால், சீனாவில் இருந்து வரும் வாகனங்கள் மங்கோலியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இது தொடா்பாக அந்நாட்டு துணை பிரதமா் உல்சிசைகான் கூறியதாவது:

ADVERTISEMENT

சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியாவோா் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. எனவே, சீனாவுடனான மங்கோலிய எல்லையை மூட முடிவு செய்துள்ளோம். எனவே, அந்த எல்லை வழியாக மங்கோலியாவில் இருந்து சீனா செல்லவும், சீனாவில் இருந்து மங்கோலியா வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுதவிர, மாா்ச் 2-ஆம் தேதி வரை மங்கோலியாவில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மக்கள் அதிக அளவில் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வா்த்தக கூட்டங்கள், மாநாடு உள்ளிட்ட அனைத்துக்கும் இந்த தடை பொருந்தும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT