கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தரக் கமிட்டி பிப்ரவரி 3ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகள் பற்றிக் கேட்டறியப்பட்டதோடு, அடுத்தக் கட்டப் பணிகளின் ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் நடைமுறையாக்கம் தற்போதைய சூழலில் முக்கியப் பணியாகும் என்று வலியுறுத்தினார். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 70 ஆண்டுகளில், சீனத் தனிச்சிறப்பு மிக்க சோஷலிசம் போன்ற நாட்டு அமைப்பு முறையும் நிர்வாக அமைப்பு முறையும் உருவாக்கப்பட்டன.
மக்களை முதன்மைப்படுத்துவது உள்ளிட்ட கருத்துகளின் நடைமுறையாக்கத்தில், அமைப்பு முறை ரீதியான மேன்மைகள் பல துறைகளில் வெளிக்காட்டப்பட்டுள்ளன. அமைப்பு முறையின் மேம்பாடு, சீனாவின் வளர்ச்சிக்கு அடிப்படை உத்தரவாதம் அளிப்பதோடு, கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிக்கும் உறுதியான ஆதரவு அளிக்கின்றது.
இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்குத் தேவைப்படும் மருத்துவச் சிகிச்சைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத் துறையில் இடைவிடாமல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி கடுமையாக இருந்த போதிலும், நாட்டின் அமைப்பு முறையின் மேம்பாட்டையும் பொது மக்களின் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தி, கரோனா வைரஸ் தடுக்கும் பணியில் சீனா வெற்றி பெறுவது உறுதி என்று நம்புகின்றோம்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்