உலகம்

நேபாள அரசியல் நெருக்கடி: சீனத் தூதுக் குழுவின் 2 திட்டங்கள்

30th Dec 2020 03:36 AM

ADVERTISEMENT

நேபாளத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டுக்கு வந்துள்ள சீனத் தூதுக் குழு இரண்டு திட்டங்களை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதுதொடர்பாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கூறியதாவது:
நேபாளம் வந்துள்ள சீன தூதுக் குழு இரு திட்டங்களை முன்வைத்துள்ளன. முதல் திட்டத்தின்படி, நாடாளுமன்ற கலைப்பை நேபாள உச்சநீதிமன்றம் ரத்து செய்தால், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரிவுகளும் ஒன்றுசேர்ந்து புதிய தலைமையின் கீழ் ஆட்சி அமைக்க வேண்டும். இந்த திட்டம் சாத்தியமாகவில்லையெனில், இடைத்தேர்தல் நடத்தலாம் என்று அந்தக் குழு யோசனை கூறியுள்ளதாக தெரிவித்தார். 
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஓலிக்கும், அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் பிரசண்டாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கருத்து வேறுபாடு முற்றியதையடுத்து, சற்றும் எதிர்பாராத விதமாக பிரதமர் சர்மா ஓலி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அந்நாட்டு அதிபர் வித்யாதேவி பண்டாரியிடம் பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர், அடுத்த ஆண்டு ஏப்ரல் 30, மே 10}ஆம் தேதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இது நேபாளத்தின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. 
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டுக்கு 4 பேர் கொண்ட சீனத் தூதக் குழு 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT