நெதர்லாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
ஆர்ன்ஹெமின் ராயல் பர்கர்ஸ் உயிரியல் பூங்காவில் சிங்கம் ஒன்று புதிதாக மூன்று குட்டிகளை ஈன்றதைக் கொண்டாடும் விதமாக பூங்காவைச் சேர்ந்தவர்கள் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த விடியோவில் பெண் சிங்கம் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றேடுப்பது போல காட்சிகள் அமைந்துள்ளன.
பொதுவாக ஆர்ன்ஹெமின் ராயல் பர்கர்ஸ் உயிரியல் பூங்காவில் இயற்கையான முறையில் சிங்கங்களை இனப்பெருக்கம் செய்ய அனுமதிப்பதுண்டு. அந்தவகையில் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் இரட்டைச் சிங்கக் குட்டிகளை மற்றொரு பெண் சிங்கம் ஈன்ற நிலையில் தற்போது சிங்கக் குட்டிகளில் மேலும் 3 குட்டிகள் சேர்ந்துள்ளன.
சிங்கக்குட்டிகள் சில நாள்களுக்கு தாயின் கவனிப்பில் வைக்கப்பட்டு பின்னர் பொதுப் பார்வைக்கு வைக்கப்படுமென பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.