அதிகரித்த வனவிலங்குகளின் எண்ணிக்கையால் வேட்டையாடுதல் மற்றும் வறட்சி நிலவுவதாகக் கூறி 170 யானைகளை ஏலம் விட நமிபியா அரசு முடிவெடுத்துள்ளது.
மாறி வரும் நவீன உலகத்தில் வனவிலங்குகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. உலக நாடுகள் பலவும் தங்களது நாட்டில் வனவிலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க நாடான நமிபியாவில் வழக்கத்திற்கு மாறாக நாட்டில் உள்ள வனவிலங்குகளை ஏலம் விடும் முடிவில் இறங்கியுள்ளது. நமிபியாவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவற்றைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. நமிபியாவில் 1995-இல் 7,500 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2019-இல் 24,000 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக அவற்றைப் பாதுகாக்க முடிவதில்லை எனவும், வேட்டையாடுதல் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதனையொட்டி நாட்டில் உள்ள 170 யானைகளை ஏலம்விட அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. யானைகளை பராமரிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், ஏற்றுமதிக்கான அனுமதி ஆவணங்களைக் கொண்டவர்களுக்கு யானைகள் ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த அக்டோபரில், மத்திய நமீபியாவில் உள்ள வாட்டர்பெர்க் பீடபூமி பூங்காவில் இருந்து 70 பெண் மற்றும் 30 ஆண் எருமைகளை அந்நாடு விற்பனை செய்தது குரிப்பிடத்தக்கது.