கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மிக பிரம்மாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
'அழகான அமெரிக்கா' என்பதுதான் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தின கருப்பொருள்.
அமெரிக்காவின் கம்பீரத்தைப் பறைசாற்றும் விதமாகவும் அதனை உலகுக்கு எடுத்துக்காட்டும் விதமாகவும் இது இருக்கும் என தற்போதைய அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் கூறுகிறார்.
மேற்கு விர்ஜினியாவின் ஷெஃபர்ட்ஸ்டவுனில் இருந்து உயரமான ஃபிர் மரங்கள் வெள்ளை மாளிகை வந்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள பல மாணவர்களும் தன்னார்வலர்களும் இணைந்து வெள்ளை மாளிகையை அலங்கரிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கேக் செய்வதற்கு 181 கிலோ மாவு, பேஸ்ட், சாக்லேட் உள்ளிட்டவை தயாராக வைக்கப்படும். இத்துடன் இந்த ஆண்டு 'ரோஜாத் தோட்டம்' புதிதாக இணைந்துள்ளது. முழுக்க முழுக்க பெண்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.
கடந்த நான்கு ஆண்டுகளில், நாட்டின் சில அழகான பகுதிகளுக்குச் சென்று இரக்க குணமுள்ள, தேசபக்தி கொண்ட அமெரிக்க குடிமக்களைச் சந்தித்த பெருமை தனக்கு கிடைத்ததாக மெலனியா டிரம்ப் கூறுகிறார். நம் நாட்டின் மரபுகள், மதிப்புகள் மற்றும் வரலாறு குறித்த பாராட்டுகள் எல்லாம் அனைத்து அமெரிக்கர்களைச் சாரும் என்றும் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் டிரம்ப் குடும்பத்திற்கு இது கடைசி கிறிஸ்துமஸ் விழா என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகத் தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் இருவரும் வருகிற ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர்.