தென் கொரியாவை மையமாகக் கொண்ட ஹூண்டாய் நிறுவனத்துக்கு அமெரிக்கா 47 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவின் சுகாதார விதிகளை மீறும் விதமான அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய டீசல் இன்ஜின்களை ஏற்றுமதி செய்தது தொடர்பாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2012-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த விதிமீறல் இன்ஜின்களைக் கொண்ட 2,300 வாகனங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் மக்களின் ஆரோக்கியத்துக்கு மாறாக லாபம் ஈட்டும் நோக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் செயல்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற மக்களுக்கு எதிரான அநீதிகளை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் நீதித்துறை எச்சரித்துள்ளது.
முன்னதாக, 2015-ஆம் ஆண்டு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க சுகாதாரத்துறை இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. அதுபோன்று ஹூண்டாய் நிறுவனத்துக்கு ஏற்கனவே காற்று மாசு விதிமீறல் தொடர்பாக 2 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.