ஆளில்லா விமானத் தாக்குதல் எதிரொலி: சவூதி கச்சா எண்ணெய் உற்பத்தி திடீர் குறைப்பு

சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலைகளில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக, அந்த ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
ஆளில்லா விமானத் தாக்குதல் எதிரொலி: சவூதி கச்சா எண்ணெய் உற்பத்தி திடீர் குறைப்பு

சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலைகளில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக, அந்த ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான அந்த நிறுவனத்தின் உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சவூதி அரேபியாவின் அப்காய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளிலுள்ள அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் ஆலைகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு, அண்டை நாடான யேமனில் இயங்கி வரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.

தாக்குதலுக்குள்ளான அப்காய்க் ஆலை, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையாகும். மேலும், குராயிஸ் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வயல், சவூதி அரேபியாவின் மிக முக்கிய எண்ணெய் வயல்களில் ஒன்றாகும்.

ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக அந்த ஆலையிலும், எண்ணெய் வயலிலும் தீப்பற்றி, கொழுந்துவிட்டு எரிந்தது. தற்போது அந்தத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அராம்கோ நிறுவனம் தெரிவித்தாலும், அந்தப் பகுதிகளில் உற்பத்தியை நிறுத்திவைத்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதையடுத்து, அராம்கோவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஏறத்தாழ பாதி அளவுக்குக் குறைந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான அராம்கோவின் உற்பத்தி இந்த அளவுக்குக் குறைந்துள்ளது, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com