குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய 3 நாடுகளுக்கான 9 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் முதல் கட்டமாக ஐஸ்லாந்து நாட்டுக்கு திங்கள்கிழமை சென்றடைந்தார்.
அங்கு அந்நாட்டு அதிபர் குட்னி ஜோஹான்சன், பிரதமர் காட்ரன் ஜேக்கப்ஸ்டாட்டிர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது, புவி வெப்பமயமாதல், எரிசக்தி, மீன்வளத் துறை, சுற்றுலாத் துறை ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் அங்குள்ள இந்திய சமூகத்தினரையும் சந்தித்து உரையாற்றினார். அதில், எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐஸ்லாந்து நாட்டுக்கு இந்திய குடியரசுத் தலைவர் வருகை தருவது இது 2-ஆவது முறையாகும். கடந்த 2005-ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இங்கு வருகை தந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நான் வருவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஐஸ்லாந்தில் உள்ள இந்திய தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார். அதுமட்டுமல்லாமல் செப்டம்பர் 11-ஆம் தேதி அங்கு நடைபெறவுள்ள இந்தியா, ஐஸ்லாந்து இடையிலான வர்த்தகக் கூட்டமைப்பில் பங்கேற்க உள்ளார்.